Sunday 24 April 2016

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து



கவிஞர் வைரமுத்துவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?

எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை

கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை

மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை

பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?

மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்

நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்

“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”



நன்றி கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு


April 2016 - சந்திரா