Thursday, 5 December 2024

ஒரு பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல்

"ஜெயலலிதா ஒரு பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல். அவருக்கு இருந்த திறமைக்கு தன் வாழ்வில் எங்கேயோ எட்டாத உயரத்திற்குப் போயிருக்க வேண்டியவர்."

"ஜெயலலிதாவுக்கு ஒன்பது வயது. அப்போது எனக்கு 14 வயசு.

எங்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாகக் காரணமாக இருந்தது நடனம்தான். இருவருமே ஒரே நடன ஆசிரியரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டோம்.

ஒரு சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் அக்கா தங்கையாக நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டோம். இருவருமே எங்களது தனிப்பட்ட விஷயங்கள் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வோம்.

தனது திரைப்பட வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் ஜெயலலிதா என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எதையும் எப்போதும் அவர் என்னிடம் மறைத்தது இல்லை.

நாங்கள் நட்போடு இருந்த காலங்களில், திடீரென்று ஜெயலலிதாவிடமிருந்து எனக்கு ஃபோன் வரும். 'இன்றைக்கு நான் ஃப்ரீயாக இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். உடனே புறப்பட்டு வா' என்று சொல்வார்.

அவ்வளவுதான். நானும் உடனடியாகப் புறப்பட்டு வந்து விடுவேன். இருவரும் எங்காவது ஒரு தனிமையான இடத்திற்குப் போய் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.

ஆனால் அந்த நட்பில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது 1983 க்குப் பிறகுதான்.

கடலூர். 

அரசியலில் நுழைவதற்கான அரங்கேற்றத்தை அங்கேதான் ஆரம்பித்தார் ஜெயலலிதா.

அங்கே நடந்த கூட்டத்தில் பேசியதுதான் ஜெயலலிதாவின் கன்னிப் பேச்சு. அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து எனக்கு அனுப்பியிருந்தார். 'நான் சரியாகப் பேசி இருக்கிறேனா ? என்னுடைய பேச்சு எப்படி இருக்கிறது? இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்' என்று கேட்டிருந்தார்.

ஆனால் அடுத்தடுத்து எதிர்பாராத மாற்றங்கள்.

அதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 1984 இல் என் கணவர் இறந்து விட்டார்.

அப்போது டெல்லியில் இருந்த ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பி இருந்தார் .

கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவின் தொடர்பு என்னை விட்டு விலகத் தொடங்கியது.

வேறு யார் யாரோ அவருக்கு நெருக்கமானார்கள்.

நானும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்கும் என்னுடைய தோழமை தேவைப்படவில்லை. அவர்களுக்கு வேறு யார் யாரோ கிடைச்சிட்டாங்க. 

ஆனாலும் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை துடிதுடித்துப் போனேன். அவருக்காக கோவிலுக்குச் சென்று வேண்டிய பிறகு, அந்த விபூதியை எடுத்துச் சென்று மெரினாவில் படுத்திருந்த ஜெயலலிதாவின் நெற்றியில் இட்டு விட்டு வந்தேன்.

இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருந்தது."

எழுத்தாளர் சிவசங்கரி



Monday, 18 November 2024

தையத்தா தையத்தா

"திருட்டுப் பயலே" படத்துல வர்ற 'தையத்தா தையத்தா' 
பாட்டை கேட்டுருக்கீங்களா? 

கண்டிப்பா கேட்டுருப்பீங்க.. 


அந்த பாட்டை ரொம்பப் பிடிக்க காரணம், அதுல இருக்க இசை, பாடல் வரிகள் இவைகளுக்கு இணையாக..  நடுவுல கரெக்டா 1:43 செகண்ட்ல சோனியா அவர்களோட வாய்ஸ் ஒண்ணு வரும்.. அதான் ரீஸன்…

"எல்லாருக்கும்தான் ஒரு கனவு இருக்கு. 
எல்லாரும்தான் உழைக்கிறாங்க.. 
இந்த பக்கம் நூறு கடை இருக்கு, 
அந்த பக்கம் நூறு கடை இருக்கு.. 
ஏறி இறங்கு.. 
ஒரு வேலையை வாங்கிட்டு.. வா என் கழுத்தை நீட்டுறேன்" 

சோனியா அகர்வால்'க்கு கொடுத்த அந்த டப்பிங் அவ்ளோ நல்ல இருக்கும்.. பெருசா காரணம் என்னன்னு தெரியாது  இந்த பாட்டுல அந்த குறிப்பிட்ட இடம் வரும்போது மட்டும் ஒரு மத்தாப்பு சிரிப்பு மனதுக்குள் வரும்.   

இந்த பாட்டுல, இந்த குறிப்பிட்ட போர்ஷன்ல இசை எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு, திடீர்னு சோனியா அகர்வால் பேசுற அந்த மாடுலேஷன், அந்த குரல்ல இருக்க ஒரு சாந்தத்தன்மை அவ்ளோ ஈர்ப்பா இருக்கும்…  

Kanmani Pandian, இவங்கதான் அந்த காந்தகுரலுக்கு சொந்தக்காரர்..)



இதன் தொடர்ச்சியாக "என் கழுத்தை நீட்டுறேன்னு அவங்க சொன்னதும்" நிலங்கள் உடைந்து போனாலும்'ன்னு  வைரமுத்து வின் வரிகளுக்கு சாதனா சர்க்கம் அந்த செகண்ட்ல ஒரு வாய்ஸ் கொடுப்பாங்க.. ப்பா…  ஒரு nostalgic vibes வரும். 

"நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது

மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல்
அது போன்றது

பெண்ணுக்கு பேராசை வேரொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை

நீ உறுதியானவன்
என் உரிமை ஆனவன்
பசி ருசியை
பகல் இரவை
பகிர்ந்து கொள்ளும் தலைவன்
தையத்தா"

Monday, 12 February 2024

நட்புகள் உருவாவதற்கு, காரணங்கள் எதுவும் தேவையில்லை

சில நட்புகள் உருவாவதற்கு, சிறப்பான காரணங்கள் எதுவும் தேவையில்லை.

இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் கமலுக்கும் இடையில் உருவான நட்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமானது, உன்னதமானது.


1977.
பாலு மகேந்திரா இயக்கிய முதல் கன்னடப் படம் 'கோகிலா'. கமல்தான் கதாநாயகன். ஆனால் அந்தப் படத்திற்கு முன்னதாகவே கமலுக்கும் பாலு மகேந்திராவுக்கும் இடையில் நல்லதொரு நட்பு மலர்ந்திருந்தது.
இந்த நேரத்தில் 'முள்ளும் மலரும்' படத்திற்காக 'நல்ல ஒரு ஒளிப்பதிவாளர் வேண்டும்' என்று கமலிடம் இயக்குனர் மகேந்திரன் கேட்டபோது கமல் சொன்ன பெயர் பாலு மகேந்திரா.
நாளுக்கு நாள் கமல், பாலுமகேந்திரா நட்பு நல்ல விதமாக வளர்ந்து வந்தது. தொடர்ந்து தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய 'அழியாத கோலங்கள்' படத்திலும் கௌரவ வேடத்தில் வந்தார் கமல்.
1993.
'மறுபடியும்’ படத்துக்குப் பிறகு, பாலுமகேந்திராவுக்கு எதிர்பாராத மிகப்பெரிய பணச்சிக்கல். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார்.
கூச்ச சுபாவம் அவருக்குக் கொஞ்சம் அதிகம். உதவி என்று இதுவரை யாரிடமும் கேட்டுப் போய் நின்றதில்லை.
இப்போது யாரிடம் போய்…?
கமலஹாசன் நினைவு வந்தது.
பழகிய நாள் முதல் இந்த நாள் வரை பண உதவி என்று கமலிடம் போய்க் கேட்டதில்லை.
ஆனால் இப்போது வேறு வழியே இல்லை. எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்.
கமலின் அலுவலகத்துக்குப் புறப்பட்டு வந்தார் பாலு மகேந்திரா.
"அடடே…வாங்க பாலு சார்…" உற்சாகமாக பாலு மகேந்திராவை வரவேற்று அமரச் சொன்னார் கமல்.
கூடவே அவரும் அருகில் அமர்ந்து கொண்டார். ஏனென்றால் கமலுக்கும் பாலு மகேந்திராவை மிகவும் பிடிக்கும்.
பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் முன்…
உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச்சை ஆரம்பித்தார் கமல். இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பாலுமகேந்திராவிடம்தான் பேச முடியும். பாலு மகேந்திராவும் அதே சுவாரஸ்யத்தோடு பேச…

மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனது.
ஆனால் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தைக் கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.
இந்த நேரத்தில் கமல் பேச்சை நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தார். "அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்."
இப்படி சொல்லிவிட்டு எழுந்து மாடிக்குப் போய் விட்டாராம் கமல். பாலுமகேந்திரா என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார்.
ஷூட்டிங் புறப்படும் இந்த நேரத்தில் கமலிடம் பணம் கேட்பது நாகரீகமாக இருக்காது.
சரி, தானும் புறப்பட வேண்டியதுதான்.

பணத்திற்கு வேறு யாரிடம் போய் நிற்பது என்ற சிந்தனையோடு எழுந்தார் பாலுமகேந்திரா.
இந்த நேரத்தில் கமல் மாடியிலிருந்து விறு விறு என்று வேகமாக இறங்கி பாலுமகேந்திராவின் பக்கத்தில் வந்தார். கமலின் கையில் ஒரு கனத்த கவர் இருந்தது.
"இந்தாங்க" என்று அதை பாலுமகேந்திராவிடம் கொடுத்தார்.
பிரித்துப் பார்த்தார் பாலுமகேந்திரா.
அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகை அந்தக் கவருக்குள் இருந்தது.
என்ன பேசுவது எனத் தெரியாமல் பாலுமகேந்திரா திகைத்து நிற்க, கமல் சொன்னாராம்.
"உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். இது கடன் இல்லை. அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற அடுத்த படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பிங்க…"
எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க கமலை கட்டி அணைத்துக்கொண்டார் பாலுமகேந்திரா.
அப்படி கமலுக்கு பாலுமகேந்திரா இயக்கிய படம்தான் சதிலீலாவதி.
(பிப்ரவரி 13 - பாலுமகேந்திரா நினைவு தினம்.)

Sunday, 7 January 2024

ஜானு – The Life of Ram – Journey - கார்த்திக் நேத்தா



நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..

தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..

ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..

நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்

வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே..

ஆரோ..
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ..

-  கார்த்திக் நேத்தா

Saturday, 6 January 2024

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு ஓரமாக நின்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஏதோ ஒரு நொடியில் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கத் தாலி, எப்படியோ அவரையும் அறியாமல் கழுத்திலிருந்து நழுவி கடலுக்குள் விழுந்து விட்டது.

"ஓ..." என்று கத்தினார் அந்தப் பெண். என்ன செய்வதென்று தெரியாமல் பதறித் துடித்தார் அருகில் நின்றிருந்த கணவர்.

இரு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

திண்டுக்கல்லில் இருந்து அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்கள். தாலியை பறிகொடுத்த அந்த பெண்ணின் பெயர் அங்கயற்கண்ணி. அவரது கணவர் மதுசூதனன்.  கோவிலுக்கு போவதற்கு முன்பு கடலில் நீராடி விட்டு போகலாமே என்று நினைத்துத்தான் இருவரும் கடலுக்குள் இறங்கினார்கள். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

இவர்கள் எழுப்பிய கூக்குரலை கேட்டு அருகில் நின்ற அனைவரும் ஓடி வந்தனர். "என்னம்மா ஆச்சு..?"

"5 பவுன் தாலி... கடலுக்குள் விழுந்துடுச்சுங்க..!"

மூச்சிரைக்க அந்தப் பெண் சொல்ல, அடுத்த நொடியே அந்த பதட்டமும் பரபரப்பும் அங்கே நின்றிருந்த அத்தனை பேரையும் தொற்றிக் கொண்டது. அந்தப் பெண்ணின் ஐந்து பவுன் சங்கிலியை தேடும் முயற்சியில் அனைவருமே தீவிரமாக ஈடுபட்டார்கள்.

நேரம் ஆக ஆக கரையில் தேடிக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடல் அலைகளின் சீற்றம் கூடிக்கொண்டே போனது.
அவ்வளவுதான். இனி அந்த தாலிச் சங்கிலி கிடைக்க வாய்ப்பில்லை என்று சொன்னதும் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அருகில் நின்ற கணவனும் கூட கண் கலங்கினார். 

இருவரும் கலங்கியபடி புலம்பினார்கள்.

"ஏற்கனவே குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அதற்காகத்தான் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தோம். வந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சனை..."
மதுசூதனன் தன்னுடைய கண்களை துடைத்தபடி தன் மனைவியை பார்த்து சொன்னார். 

"எங்கே போனாலும் நம்முடைய விதி நம்மை விடுவதில்லை.
சரி வா, நாம் ஊருக்கு புறப்படலாம்."

அங்கயற்கண்ணி இன்னும் அதிகமாக அழுதபடி, "மாட்டேன். என்னுடைய தாலி கிடைக்கும்வரை யார் என்ன சொன்னாலும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்."

அந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்டு அங்கே நின்றிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த நகை கடலுக்குள் விழுந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. அந்த தாலியை எந்த அலை எங்கே கொண்டு போனதோ...
யாருக்குத் தெரியும் ?

ஒரு வேளை கடற்கரையில் நின்றிருந்த அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவரின் கையில் அந்த சங்கிலி கிடைத்திருந்தாலும் கூட அவர் திரும்ப கொண்டு வந்து கொடுக்கவா போகிறார் ? வாய்ப்பே இல்லை.

இது அங்கே நின்றிருந்த அனைவருக்கும் புரிந்தது, அந்தப் பெண் அங்கயற்கண்ணியைத் தவிர.

முழு நம்பிக்கையோடு சொன்னார் அங்கயற்கண்ணி. "கிடைக்கும். நிச்சயமாக கிடைக்கும். எப்படியாவது எனக்கு என் தாலி கிடைக்கும்."

இந்த நேரத்தில் மதுசூதனனுக்கு தற்செயலாக ஒரு ஃபோன் கால். திண்டுக்கல்லில் இருந்து நண்பர் ஒருவர் அழைத்தார்.
மிக மிக முக்கியமான பிரமுகர் அவர். 
அவரிடம் மதுசூதனன், தான் திருச்செந்தூர் வந்திருப்பதாகவும் இங்கே தனக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையையும் எடுத்துச் சொன்னார்.
விஷயத்தை முழுவதும் கேட்ட நண்பர், "ஒன்று செய்யுங்கள் மதுசூதனன். நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யுங்கள். தேவைப்பட்டால் என்னுடைய பெயரையும் சொல்லுங்கள்."

அடுத்த நிமிடமே காவல்நிலையம் போனார் மதுசூதனன். விஷயத்தைக் கேள்விப்பட்ட போலீசார்  கடற்கரைக்கு விரைந்து வந்தார்கள்.
உடனடியாக கடலில் சிப்பி சேகரிக்கும் தொழிலைச் செய்யும் ஆட்களை வரவழைத்தார்கள். சுமார் 50 பேர் முழுமூச்சாக கடலில் இறங்கி தேட ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண் அங்கயற்கண்ணி கடற்கரையோரமாக நின்று கைகளைக் குவித்து கண்ணீர் வடித்தபடி முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையையும் சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தார்.

"கார்த்திகேயா…
சரவணா..
வேல் முருகா..
கந்தா..
கதிர்வேலா"

இடைவிடாமல் முருகனின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் குரலை மிஞ்சும் விதமாக உரத்த குரலில் கத்தினார் ஒருவர்.
"கிடைச்சிடுச்சு... நகை கிடைச்சிடுச்சு..!"

எல்லோர் கண்களும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பின. கையில் அந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, கடலில் இருந்து கரையை நோக்கி ஓடி வந்தார் ஒருவர்.

பளிச்சென அவரின் கையில் மின்னியது அந்தப் பெண்ணின் தாலி.
பேச முடியாமல் அந்தப் பெண்ணின் குரல் உடைந்து போனது. "நன்றி நன்றி நன்றி" என்று திரும்பத் திரும்பச் சொல்லி கண்ணீர் வடித்து கொண்டிருந்தார். காவல்துறையினர் கூட அந்த மனிதருக்கு நன்றி சொன்னார்கள்.

ஒரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார். "வெரிகுட், எப்படியோ ஒருவழியாக அந்தப் பெண்ணின் நகையை தேடிக் கண்டுபிடித்து எடுத்து கொடுத்துட்டீங்க…

ஆமா…உங்கள் பெயர் என்ன ?"

நனைந்திருந்த ஈர தலையை துவட்டி கொண்டே அந்த மனிதர் அமைதியாகச் சொன்னார்.

"சரவணன்..!"

புன்னகை பூத்த முகத்துடன் அந்தப் பெண் எல்லோருக்கும் நன்றி சொன்னார். எல்லோருமே புன்னகைத்தார்கள்.

திருச்செந்தூர் முருகன் கூட புன்னகை பூத்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

Courtesy: Facebook post
2024 - சந்திரா