Thursday 31 December 2020

ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு - நா. முத்துக்குமார்

மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப் பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்:

‘‘படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?’’
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
‘‘டாக்டர்’’ என்றார்கள் 
கோரஸாக.

இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது பார்க்க நேர்கிறது.

‘‘இன்ஜினியர் ஆகப் போகிறேன்’’
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப் 
போய்விட்டான்.

‘‘எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப் 
பாத்துப்பேன்’’
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்,
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.

‘‘ப்ளைட் ஓட்டுவேன்’’
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு,
டி.என்.பி.எஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.

‘‘அணுசக்தி விஞ்ஞானியாவேன்’’
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் காற்று
எல்லோரையும்
திசைமாற்றிப் போட,

‘‘வாத்தியாராவேன்’’
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.

‘‘நெனைச்ச வேலையே செய்யற,
எப்பிடியிருக்கு மாப்ளே?’’ என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்துக்கொண்டு

‘‘படிச்சு முடிந்ததும்
என்ன ஆகப் போறீங்க? என்று
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை!’’
என்றான்.

Sunday 20 December 2020

பூ பூக்கத்தானே செய்கிறது

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு தினம்.

(21 டிசம்பர் 2018)

1996 இல் திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை தற்செயலாக சந்தித்து இருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

அந்த சந்திப்பின்போதுதான் கருணாநிதி அவர்களுக்கு தெரியும், வாடகை வீட்டில்தான் பிரபஞ்சன் இன்னும் வசித்து வருகிறார் என்பது !

சென்னையில்  மேன்ஷன்களிலும்,

வாடகை வீடுகளிலும்தான்

ரொம்ப காலமாகவே வசித்து வந்திருக்கிறார் பிரபஞ்சன்.

இதையறிந்த கருணாநிதி அவர்கள் ஆச்சரியத்தோடு கேட்டார்.

"என்ன சொல்கிறீர்கள் பிரபஞ்சன், இதுவரை நீங்கள் சொந்த வீடு வாங்கவில்லையா ?"

ஒரு நொடியும் சிந்திக்காமல் பிரபஞ்சன் இப்படிச் சொன்னார்.

"குங்குமம் இதழில் கதை எழுதினால் நூறு ரூபாய் கொடுக்கிறார்கள். இதில் எப்படி நான் வீடு வாங்குவது ?"

படைப்பாளிக்கே உரிய பரிகாசம்...!

ஒரு கணம் திகைத்துப் போன கருணாநிதி அவர்கள் உடனடியாக பிரபஞ்சனுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார்.

முதல்வருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டார் பிரபஞ்சன்.

ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். "வாடகை வீடு, மேன்சன் வாழ்க்கை, 

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் எப்படி இத்தனை அற்புதமான விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"

அதற்கு புன்னகைத்தபடி, 

தனது பிரபலமான அந்த வாசகத்தைக் கூறினார் பிரபஞ்சன்.

"எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் 

ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது !''

Sunday 29 November 2020

நல்லவன் வாழ்வான்

சாரதா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய  முதல் பாடலின்  ஒலிப்பதிவு !

இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார்.

சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் குரல் சரியாக இல்லையென்று சொல்லி, அன்றும் ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. 

அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

அவ்வளவுதான் ! இயக்குனர் நீலகண்டன் ஒரு முடிவெடுத்து விட்டார்.

“வாலி  எழுதிய  இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு. எனவே   மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்” என்று சொல்லி விட்டார் நீலகண்டன்.

இதைக் கேட்ட வாலி வாடிப் போய் நின்றாராம். சற்று நேரத்தில் 

மருதகாசியையும் பாட்டு எழுத அழைத்து வந்து  விட்டார்களாம்.

வந்தவர் ஏற்கனவே வாலி  எழுதியிருந்த பாடலை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தாராம்.

பதைபதைக்கும் உள்ளத்தோடு, 

வாலி ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க, 

வாலி எழுதிய வரிகளை நிறுத்தி நிதானமாக வாசித்துப்  பார்த்த கவிஞர் மருதகாசி இப்படி சொன்னாராம் :

"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே படத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பாப்புலராகும்..!'' 

கண்களில் நீர் வழிய  வாலி சொல்கிறார் இப்படி :

“அண்ணன் மருதகாசிக்கு அன்றைக்கே மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்..!”

மருதகாசி மனதாரப் பாராட்டிய அந்தப் பாடல் :

"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.

சிந்திய கண்ணீர் மாறியதாலே'' 

படம் :"நல்லவன் வாழ்வான்''

நவம்பர் 29 - மருதகாசி நினைவு தினம். 



Sunday 8 November 2020

சுஜாதாவின் அறிவியல் ஆளுமை

எந்திரன் படத்தில் ஒரு காட்சி வரும்

வசீகரன்: பிரபஞ்சத்தில் மனித உயிர் என்பது ஒரு தனிப்பட்ட விபத்து. இவ்வளவு பெரிய பேரண்டத்தில் உயிர் மட்டும் தற்செயலாக அமைந்தது.

சிட்டி:  உயிர் என்றால் என்ன

வசீகரன்:   DNA என்ற மிகப்பெரிய மூலக்கூறு

சிட்டி: DNA வை வரைந்துவிட்டு "இதுதான் உயிரா" என்று கேட்கும்.

வசீகரன்:  "உயிர் என்பது ஃபார்முலா இல்லை, பாக்டீரியாவுக்கு உயிருண்டு சோடியத்திற்கு உயிரில்லை" என்பார். 

சிட்டி:  "எனக்கு உயிர் இருக்கிறதா ?" இந்தக் காட்சி பின்வருவாறு முடியும். 

சிட்டியின் மீது ஒரு மின்னல் அடித்து அதன் மூலம் சிட்டி தூரப் போய் விழும், ஆனால் அருகில் இருந்த வசீகரனுக்கு எதுவும் ஆகாது 

"இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர் பொருள் என்பதை யும், உயிர் ஆக்கப்பட்ட பொருளயும் உணர்த்தும்"

பணம் - சுஜாதா

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது!.
எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.
ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...
என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.

இது இயற்கை நியதி.
அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.
இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,
செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.
இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான்.
இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.


Sunday 18 October 2020

மணிரத்னம் மற்றும் ஷங்கர்- TravelRival

மணி   1983லயிருந்து படம் எடுத்திட்டிருக்கார். 
ஷங்கர் 1993லயிருந்து படம் எடுத்திட்டிருக்கார். 
மணி 1992ல ரோஜா, மதுபாலா ஹீரோயின்
ஷங்கர் 1993ல ஜென்டில்மேன். சேம் ஹீரோயின்  
மணி 1995ல பாம்பே எடுத்தார்.
ஷங்கர் 1996ல இந்தியன் எடுத்தார். சேம் ஹீரோயின். 
1997ல மணி, இருவர். 
1998ல ஷங்கர்,  ஜீன்ஸ். சேம் நாயகி. ஐசு. 
1998ல தில்சே, மணி
1999ல ஷங்கர், முதல்வன். சேம் ஹீரோயின். 
2001ல ஷங்கர் நாயக் எடுக்கிறார். ராணி முகர்ஜி. 
இந்த முறை மணி ராணியை வச்சு ஷாதியா எடுக்கிறார். 
2002ல மணி 5ஸ்டார்ங்கற 5மாணவர்கள் கதையை தயாரிக்கிறார். 
ஷங்கர் 2003ல 5மாணவர்களை வச்சு பாய்ஸ் எடுக்கிறார். 
2004ல மணி 3 ஹீரோவை வச்சு ஆயுத எழுத்து எடுக்கிறார்.  ஷங்கர் 2005ல ஒரே ஹீரோ மூணு வேடம். படம் அந்நியன். 
2007ல மணி சாதாரண மனிதன் பணக்காரனாமாறுன குரு எடுக்கிறார். 
2010ல ஷங்கர் பணக்கார சிவாஜி சாதாரணமா மாறுற சிவாஜி எடுக்கிறார்.  
மணி ஐசுக்கிட்ட ராவணனுக்காக போறார். 
ஷங்கர் எந்திரனுக்காக போறார். 


அப்புறம் இரண்டு பேரும் லிங்காககிற இன்னொரு விஷயம். ARரஹ்மான். அவரோட அதிக ஹிட்சும் இந்த ரெண்டு பேரோட தான்.

Friday 11 September 2020

பாரதி சிறுகுறிப்பு

பாரதிக்கு 'புதுச்சேரி' கொடுத்த 'கவிதை மகுடமும்”, 'கஞ்சா பழக்கமும்”

பாரதி கவிதையின் உச்சம் தொட்டது புதுச்சேரியில் வாழ்ந்த காலங்களில்தான்..அதே சமயம் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இறுதிகாலத்தில் சீரழிந்ததும்  புதுச்சேரியில்தான்..  

 'இந்தியா” வார இதழ் அரசாங்கத்தின் அடக்கு முறையின் காரணமாக நின்றுபோய்விட அதன் பின்னரே புதுவையில் பாரதியின் படைப் புகள் யாவும் 'காட்டாற்று வெள்ளம் போல...” கணக்கின்றி வெளிவரத் தொடங்கின. 

வேதாந் தப் பாடல்கள், சக்திப் பாடல்கள்; பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை போன்ற தமிழின் உன்னதமான படைப்பு களும், 'கண்ணன் பாட்டு”, 'குயில்பாட்டு”, பாஞ்சாலி சபதம்” ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் ஏறக்குறைய இக்காலத்தில்தாம் வெளிவந்துதது.. 

மனித சமூகத்தின் விடுதலை வேட்கையையும், வாழ்வின் மகத்தான இலட்சியங்களையும், , நேர்ப்பட, அஞ்சாது பதிவுசெய்த இடம் புதுச்சேரி என்பதை அவனின் படைப்புகளே நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

 வறுமையின் காரணமாக பாரதி, தன் வீட்டை ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியின் கோடியில் இருந்த 'விளக்கெண்ணெய்ச் செட்டியாரின்...” வீட்டுக்கு மாற்றிக் கொண்டுவிட்டிருந்தார். இந்தச் செட்டியார் பாரதியிடத்தில் வீட்டு வாடகை கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார். பிறகு மௌனமாய் வெளியே போய்விடுவார். பாரதி பேச்சுக் கொடுத்தால் ஒழிய செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார்.

இவரின் வீடுதான் பாரதிக்கு சங்கப் பலகை; கான மந்திரம்..அத்தகைய சிறப்புடைய விளக்கெண்ணைய்ச் செட்டியாரின் வீடு மட்டும் இல்லாது போயிருந்தால் பாரதியின் புதுச்சேரி வாசமும், அவனுடைய வாழ்க்கையும் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும் என்பது நிதசர்னமான உண்மை…

வீட்டுத் தொல்லைகள் காரணமாகவும், அவற்றை மறக்கவும் புதுவை கடற்கரையில் பல நாட்கள் இரவெல்லாம் புலம்பியபடி கழித்தார்..:” தாயே பராசக்தி..! தீராத குழப்பம்.. எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!.

என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்...? எனது குடும்பப் பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சிப் புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது.  ...” என கடற்கரையில் புகைத்துக்கொண்டிருந்த பாரதியைக் கண்டதாக வ.வே.சு.ஐயர், 'குறிப்பிடுகிறார்.. பாரதியாருக்குக் கஞ்சா சாப்பிடும் வழக்கம் புதுவை குள்ளச்சாமியின் பழக்கத்தால் ஏற்பட்டது...” என்றும் குறிப்பிடுகின்றார்.

அதுபோல, 'பாரதி புதையல்” மூன்றாம் தொகுதியில் பாரதியுடன் நெருங்கிப் பழகியவரும், புதுவையில் 'இந்தியா”, 'விஜயா”, 'கர்மயோகி” முதலிய பத்திரிகைகள் நடந்துவந்த காலத்தில் பாரதிக்குத் துணை புரிந்தவருமான பரலி சு. நெல்லையப்பர் எழுதியுள்ள கட்டூரையொன்றில் 'பாரதிக்கு வறுமையின் கொடுமையாலும், ஒரு சாமியாரின் கூட்டுறவாலும் புதுவையில் இருந்தபோது கஞ்சா பழக்கமேற்பட்டதும், அதனால் உடல் நிலை மோசமானது...” என்றும் அதனை உறுதி செய்கின்றார். 

இறுதிக்காலத்தில் யானை அடித்த காயத்தாலும்,கஞ்சா பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் நலிவாலுமே பாரதியின் உயிர் பிரிய நேரிட்டது..

பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை அவனுக்கு 'கவிதை மகுடத்தையும்”, 'கஞ்சா பழக்கத்தையும்” ஒரு சேர ஏற்படுத்தித் தந்தது அவன் வாழ்வின் விதியன்றி வேறு என்னவாக இருக்க முடியும்...?

Friday 28 August 2020

பேரறிஞர் அண்ணா - மைக்கேல் ரானடே - போப்பாண்டவர்

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. 

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். 

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. 

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். 

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. 

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

Sunday 9 August 2020

கிரேசி மோகன் பத்து நொடி, பத்து வெடி (சிரிப்பு).

Take things Easy, Life is Crazy.

😁
இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
😁
என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!
அய்யோ...!! அப்பறம்?
“சாத்திட்டா”
😁
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?
முழுகாம இருக்கா..!!!???....
😁
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?
போயும் போயும்j இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!
😁
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
😁
வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
அதனால…?
வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!
😁
"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"
"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"
😁
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?
ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!
😁
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"
"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
😁
💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?
அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

Sunday 3 May 2020

10 செகண்ட், 7 கதைகள்

#ஸீட்
தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட்  வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
=============
#தமிழன்டா
சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்…"அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
=============
 #திருட்டு
"பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு…'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
=============
#பணம்
பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்….இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
=============
#பழங்கதை       
தம்பிதானே….விட்டுக்கொடுப்பா" என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் வரிசையில் நின்றிருந்த தந்தை!
=============
#அக்கறை
கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
=============
#விதி
"துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!
2020 - சந்திரா