Sunday 25 September 2022

அதென்ன "ஈயாரி எசமாரி" - பொன்னி நதி பார்க்கணுமே

பொன்னி நதி பார்க்கணுமே… பாடல் பட்டி தொட்டி எங்கும் 

ஒலித்து க்கொண்டு இருக்கிறது

அதென்ன  "ஈயாரி எசமாரி" chorus 

இது rhyming க்காக உபயோகப்படுத்தப்பட்ட இசை சொற்கள் என்று தான் பலர் நினைத்து இருப்போம், தெலுங்கு ஹிந்தி பாடல்களை கேட்கும் போது இது வேறு வார்த்தைகள் கொண்டு பாடப்பட்டது தெரிந்தது,  Rhyming words என்றால் அங்கேயும் அதே தானே இருக்க வேண்டும் என யோசித்து இதுக்கு அர்த்தம் ஏதும் இருக்குமோ என பார்த்தால்.. ஆம் உள்ளது

அவர்கள் பாடுவது 

ஈ + ஆரி + எச‌ + மாரி

தமிழில் ஒற்றை எழுத்துக்கு பொருள் உள்ளன என நாம் அறிந்ததே (உதா: ஆ - பசு, கோ - அரசன், உ - சிவன், ஐ - அழகு)

என்கிற சொல்லுக்கு ஒரு அர்த்தம் வில், அம்பு, ஈட்டி போன்ற போர் ஆயுதங்கள் 

ஆரி - என்றால் வீரன்

எச - இசை

மாரி - மழை 

அதாவது chorus பாடுவதின் பொருள் 

"வில் வீரனின் இசை மழை"

பாட்டின் சூழலுக்கு கச்சிதமாக பொருந்தும் வரிகள்

வாழ்த்துகள் இளங்கோ கிருஷ்ணன் (பாடலாசிரியர்), மணிரத்னம், ஏ. ஆர். ரகுமான்


Content Credits: - இரா. இராஜகோபாலன்

Sunday 18 September 2022

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் - ஓரிக்கை

திருமழிசையாழ்வாரின் சீடன் கணிக்கண்ணன். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் சேர்த்து உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார் ஒரு மூதாட்டி. அவரின் சேவையைக்கண்டு மனம் மகிழ்ந்த ஆழ்வார், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியும், 'தங்களுக்கு மேலும் தொண்டு செய்ய எனக்கு நல்ல உடல் பலம் வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார்.  அடுத்த கணம் அவரின் முதுமை நீங்கி இளமை திரும்பியது. இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட அந்த நாட்டின் மன்னன் கணிக்கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கணிக்கண்ணன் மீதும், ஆழ்வார் மீதும் பொறாமை கொண்டிருந்த சிலர், கணிக்கண்ணன் சொன்னால் ஆழ்வார் எதையும் செய்வார் என்று சொல்லி மன்னரின் பேராசையைத் தூண்டினர். 

அரண்மனை வந்த கணிக்கண்ணனிடம் மன்னன், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும் ' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, " குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய உத்தரவின் வழியாகப் பெறமுடியாது" என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். 'தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார்.' இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோயிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுமாறு ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்.

"கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்"   

- என் சீடன் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன். பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை. நீயும் உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு என் பின்னாலேயே வா என்பது இதன் பொருள்.  

சீடன் முன்னே செல்ல, ஆழ்வார் பின்னே செல்ல, அவர்களைத் தொடர்ந்து பெருமாளும் தன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு அவர்கள் மூவரும் ஊர் எல்லையைக் கடந்து ஓர் ஊரில் தங்கினர். நாராயணன் வெளியேறியதும், அவன் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். திருவும் இறையும் இல்லாத ஊரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினர். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.  மறுநாள் பூஜை செய்யவந்த அர்ச்சகர்கள் கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். இந்தத் தகவல் மன்னனுக்குப் போனது. மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். ஓடோடி வந்து ஆழ்வாரின் காலடியில் வீழ்ந்து பணிந்து தன் பிழை பொறுக்குமாறு வேண்டினான். ஆழ்வாரும் அவனை மன்னித்து 

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்" என்று பாடினார்.

உடனே பெருமாள் மீண்டும் தன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொண்டு திருவெக்கா வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். 

ஓர்நாள் இரவில் பெருமாள் தங்கிய ஊர் ஓரிக்கை (ஓர் இருக்கை) என்றானது. மற்ற தலங்களில் எல்லாம் பெருமாள் இடமிருந்து வலமாகச் சயனித்திருக்க, திருவெக்காவிலோ வலமிருந்து இடமாகச் சயனித்திருப்பார். ஆழ்வாரின் சொல் கேட்டு எழுந்து நடந்து மீண்டும் வந்து படுத்ததால் இந்தப் பெருமாளுக்கு 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று திருநாமம் ஏற்பட்டது. இறைவனே திருமழிசையாழ்வாரின் சொல்படி கேட்டு நடந்ததால் , 'மழிசைபிரான்' என்றும் இறைவனும் அடியவரின் சொல்கேட்டு நடந்ததால், 'ஆராவமுத ஆழ்வார்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.


Sunday 24 July 2022

பேதை மனிதனே - நீங்கள் கேட்டவை

இதோ, இங்கே இருக்கும் அண்ணாவின் படம், ஒரு திரைப்படத்தில், பாடலுக்கு இடையே ஒரு சில நொடிகள் காட்டப்படும் காட்சி.

அது என்ன படம் என்று பார்ப்பதற்கு முன்… அண்ணா அவர்களை பற்றி ஒரு சுவாரஸ்யம். அண்ணா முதல்வராக இருந்தபோது டில்லியில் ஒரு பத்திரிகையாளர் கூட்டம்.

அந்தக் கூட்டத்தில் வட இந்திய பத்திரிகையாளர்களின் வாட்டி எடுக்கும் கேள்விகளும், அதற்கு அண்ணா வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த பதில்களும்.

கேள்வி: ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக  கூடாது என்று மறுக்கிறீர்கள் ?” 

அண்ணா: ”நீங்கள் எதற்கு ஹிந்திதான் ஆட்சி மொழியாக  வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ?” 

கேள்வி: ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே ? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி ?” 

அண்ணா : ”நீங்கள் சொல்வது போலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் ? காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை நாம் தேசியப் பறவையாக வைக்கவில்லையே ?   

மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் ?”

அரங்கில் இருந்த அத்தனை பத்திரிகையாளர்களின் கைதட்டலும் அடங்க வெகு நேரமானதாம்.

இவ்வளவு சுவாரஸ்யமாகப் பேசத் தெரிந்ததால்தான் அண்ணாவால் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது.

சரி. வழக்கமாக எம்.ஜி.ஆர்.தான், தன் படத்தில் பாடல் காட்சி இடையே எப்படியாவது அண்ணாவின் சிலை அல்லது படத்தைக் காட்டி விடுவார். 

ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் அண்ணாவின் படம் 

பாலு மகேந்திரா தனது 'நீங்கள் கேட்டவை' படத்தில் “கனவு காணும் வாழ்க்கை யாவும்”   பாடலின் இடையே,

“பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்”  என்ற வரிகள் ஒலிக்கும்போது காட்டும் காட்சி.  

இந்தக் காட்சி, படித்தவர் பாமரர் என்ற பேதம் இன்றி, பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளைக் கூட  அண்ணா வசியம் செய்து வைத்திருந்ததற்கு ஒரு சாட்சி.

Content Credits: John Durai Asir Chelliah

Friday 17 June 2022

வேகத்தின் விலை

"நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய், அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்."  - நடிகர் மம்முட்டி

தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும்  "காழ்ச்சப்பாடு", என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை "மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்" என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். 

இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒரு கட்டுரை "வேகத்தின் விலை"

கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப்ப பிடிக்கும்.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார். 

ஒருமுறை  ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது.  பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தது. 

அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார். 

இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில்  வண்டி நிலை குறைந்தது.  இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது. 

வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன். அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார்.  அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.

கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார். 

பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்."  திடீரென காருக்கு குறுக்கே வந்த போது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.  இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என் வண்டியில் ஏற்றிக் கொண்டேன். 

அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள். 

அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. 

அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில்.  மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது  மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.  ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.  கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார்.  கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார். 

உங்க பேர் என்ன என்று கேட்டார்.  மம்முட்டி என்ற  பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை.  எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.

என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.

அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து "இத டீ செலவுக்கு வச்சிக்க" என்று என்னிடம் தந்தார். 

என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.

அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள்.  அதை எதற்காக தந்தார் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. 

ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும்.  என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும்.   அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

Sunday 12 June 2022

உள்ளம் உருகுதடா…. உருகுதய்யா

டி.எம்.எஸ். பாடிய பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.

ஆனால் இசைத்தட்டுக்காக, பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட, இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்.எஸ், வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார்.

அங்கு வேலை செய்த பையன் ஒருவன் அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பதை தற்செயலாக கவனித்தார்.

அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.

அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்,

முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.

டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி, இங்கே வாப்பா.”

வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.

எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.

“பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு.”

ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி,

பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு !

ஆனால் எந்த ஊரிலும் யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.

பல வருஷங்கள் கடந்த பின் தற்செயலாக சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.

கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .

காரணம் - அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :

“உள்ளம் உருகுதடா .”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று உற்றுப் பார்க்கிறார் டி.எம்.எஸ்.

அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் - "ஆண்டவன் பிச்சி"

யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?

டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது.

நாளுக்கு நாள் அது தீவிரமானது.

அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.

பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி.

பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள்.

பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.

முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன், கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.

அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த …

காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து, “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப … அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.

(சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.)

அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ !

அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.

சரி. இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ? டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது ?  

எல்லாம் அவன் செயல்

"கண்கண்ட தெய்வமய்யா  நீயிந்தக் கலியுக வரதனய்யா…

பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா…."

….

"பந்த பாசம் அகன்றதையா

உந்தன்மேல் நேசம் வளர்ந்தததையா

ஈசன் திருமகனே

எந்தன் ஈனம் மறைந்ததப்பா

உள்ளம் உருகுதையா !"



அமைதி அரசர் புத்தரும், ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும்

"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை"

அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க!!! - அறை எண் 305 இல் கடவுள் திரைப்படத்தின் ஒரு காட்சி  

எம்.எஸ் பாஸ்கர்: 

கடவுள் ஒரு காட்டுமிராண்டி சார்

என்னை போட்டு பாடாப் படுத்துறான்.

எனக்கு ஒரே பொண்ணு சார்

பயபுள்ள என் கிட்ட ரொம்ப பிரியமா இருக்கும்.

வெள்ளாளப்பட்டில கல்யாணம் பண்ணி கொடுத்தோம்

மாப்பிள்ளையும் நல்லவர் தான்.

என்ன பிரச்சனைன்னு தெரியல

நாலு நாளைக்கு முன்னாடி

எம்புள்ளைய வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாரு

எம்புள்ள ஓ-னு அழுகுறா 


பிரகாஷ்ராஜ்: 

முதல்-ல அழுகைய நிறுத்துங்க

அழுகைய நிறுத்துங்க

நான் ஒன்னு சொல்லட்டுமா?


எம்.எஸ் பாஸ்கர்: சொல்லுங்க


பிரகாஷ்ராஜ்:

நீங்க தினமும் கும்புடுற புத்தர் "அக்சப்ட் தி பெயின்-னு" (Accept The Pain) சொல்றாரு

அதுக்கு அர்த்தம் தெரியுமா?


எம்.எஸ் பாஸ்கர்: 

"அரசமரத்து பூவ வையி"னு அர்த்தம்னு பிரபு சொன்னாரு.

தினமும் வைக்குறேன் சார்


பிரகாஷ்ராஜ்: அவன் கிடக்குறான் லூசு

அக்சப்ட் தி பெயின்-னா "வலியை ஏத்துக்கணும்னு" அர்த்தம்

அதான் வாழ்க்கை


எம்.எஸ் பாஸ்கர்:

என்ன சார் கேனத்தனமா இருக்கு ?

எதுக்கு சார் வலிய ஏத்துக்கணும்?


பிரகாஷ்ராஜ்:

சொல்றத கேளுங்க

இப்ப நீங்க ஊர்ல ஜிம்முக்கு போய்கிட்டு இருந்தேனு சொன்னிங்க


எம்.எஸ் பாஸ்கர்: ஆமா


பிரகாஷ்ராஜ்: 

ஏன் உங்க ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஜிம்முக்கு போறாரு

அங்க என்ன சொல்லி கொடுக்குறாங்க


எம்.எஸ் பாஸ்கர்: என்ன சொல்ராங்க?


பிரகாஷ்ராஜ்: 

நாம பயிற்சி பண்ணும் போது தசையெல்லாம் வலிக்கும்-ல

வலி இருந்தா அந்த தசை ஆரோக்கியமா விரிஞ்சுக்கிட்டு இருக்குனு தானே அர்த்தம்?

அந்த வலி இருந்தால் தானே தசையவே உங்களால உணர முடியுது.

அதே மாதிரி தான் வலி இருந்தால் தான் வாழ்க்கையை உணர முடியும்.

இதோ பாருங்க உங்க மகள் மருமகனோட பிரிவு

அவுங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்குற அன்ப அதிகமாக்கும்.

வாழ்க்கை அழகா இருக்கும். 

"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை" உங்க அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க "வலியை ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்"

Saturday 14 May 2022

அன்னக்கிளியும், மாங்காடு காமாட்சியும்

குழப்பத்தோடு மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தார் இளையராஜா. 

கோவிலுக்குள்ளே நடந்திருந்த ஒரு சம்பவம் அவரை மிகவும் பாதித்திருந்தது.

அவர் கூடவே கங்கை அமரன், பாஸ்கர். 

அன்றுதான் அன்னக்கிளி (1976) பாடல் ஒலிப்பதிவு என சொல்லி இருந்தார்கள் பஞ்சு அருணாசலம் படக் குழுவினர்.

பல வருட சோதனைக் காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. நீண்ட கால லட்சிய கனவு நிறைவேறும் நேரம் வந்து சேர்ந்து விட்டது என நெஞ்சம் நிறைய மகிழ்ச்சியோடு நின்றிருந்தார்கள் ராஜா சகோதரர்கள்.

அதனால்தான் அர்ச்சனையும் வழிபாடும் செய்ய அதிகாலையிலேயே மாங்காடு கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

அர்ச்சனை முடிந்த பின், 

தலை தாழ்த்தி வணங்கி விட்டு நிமிர்ந்து அம்மன் முகத்தைப்

பார்த்த இளையராஜா திடுக்கிட்டுப் போனார் .

அம்மன் இளையராஜாவைப் பார்த்து புன்னகைத்து இப்படி சொல்வது போல ஒரு உணர்வு.

"உன் சோதனை காலம் இன்னமும் முடியவில்லை மகனே, பொறுமையோடு இரு !"

இளையராஜா கொஞ்சம் பயந்துதான் போனார். "இன்றைய பாடல் ஒலிப் பதிவு எப்படி நடைபெறும் ? ஒருவேளை இதுவும் தடைப்பட்டு நின்று போய் விடுமோ ?"

ஏனெனில் ஏற்கனவே தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை நிறைய பேர் நிறைய விதமாக குழப்பி இருந்தார்கள். 

ராஜா ராசியில்லாதவர் என ஒருவர் சொல்லி இருந்தார். விஸ்வநாதனைப் போட்டால் வியாபாரம் நன்றாக இருக்கும் என இன்னொருவர் ஆலோசனை கொடுத்திருந்தார்.

இது எல்லாவற்றையும் மீறித்தான் பஞ்சு அருணாசலம் இளையராஜாவை புக் செய்திருந்தார். இன்று பாடல் ஒலிப்பதிவு என்றும் சொல்லி இருந்தார்.

அடடே ! ஒலிப் பதிவுக்கு நேரமாகி விட்டதே !

இளையராஜா சகோதரர்கள் கோவிலிலிருந்து புறப்பட்டு நேராக வந்த இடம்...

ரெக்கார்டிங் ஸ்டூடியோ.

பூஜை முடிந்து ரிகர்சல் தொடங்கியது.

ஆர்க்கெஸ்ட்ராவில் இருந்த அத்தனை பேரும் இளைய ராஜாவையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, உள்ளமெல்லாம் இறைவனை வேண்டிக் கொண்டு இளையராஜா குரல் கொடுத்தார் :

"ரெடி, ஒன், டூ, திரீ'' 

அடுத்த வினாடி பவர் கட். அத்தனை விளக்குகளும் அணைந்து போயின. எங்கும் ஒரே கும்மிருட்டு.

சப்த நாடியும் அடங்கி விட்டது ராஜாவுக்கு.

டோலக் வாசிக்கும் பாபுராஜ் 'ம்..நல்ல்ல்ல சகுனம்' என்றார், கேலியும் கிண்டலுமாக.

உள்ளம் நொறுங்கி போனார் இளையராஜா. சட்டென்று எழுந்து ஸ்டூடியோவிலிருந்த தனி அறைக்குள் புகுந்து கொண்டார்.

இந்த வாய்ப்பும் கை நழுவிப் போய் விடுமோ ? சகுனம் சரியில்லை என்று சத்தமாகவே சொல்கிறார்களே !

காலையில் பார்த்த அம்மனின் புன்னகை முகம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் புரியவில்லையே !

சிறிதுநேரம் அப்படியே

தனியாக அமர்ந்திருந்தார் இளையராஜா.

இதற்குள் மின்சாரம் வந்து விட்டது.

மறுபடியும் தேங்காய்.

மறுபடியும் கற்பூரம்.

"சைலன்ஸ்! டேக்…ரன்னிங்''

கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ.." என குரல் கொடுக்க, எஸ். ஜானகி "ஆ...ஆ..." என்று ஹம்மிங்கை தொடங்க…

அருமையாக வந்திருந்தது அந்தப் பாடல்.

இருந்தாலும் ரெக்கார்டிங் என்ஜினீயர் சம்பத் ஒன்ஸ்மோர் போய்ப் பார்க்கலாமே என்றார்.

இளையராஜா சும்மா இருந்திருக்கலாம். ஆனாலும் இப்படி சொன்னார்.

"முதலில் பதிவான பாடலை ஒரு தடவை போட்டு கேட்டுப் பார்த்து விடலாமே !"

"ஏன் ராஜா ?"

"அதை ஒருமுறை கேட்டுப் பார்த்தால் ஆர்கெஸ்ட்ராகாரர்கள் தங்கள் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே...'' 

டேப்பை ரிவைண்ட் செய்தார்கள். ஆன் செய்தார்கள்.

டேப் ஓடியது ஓடியது ஓடிக் கொண்டே இருந்தது.

ஒரு சப்தமும் வரவில்லை.

ஏனெனில் பாடல் பதிவாகவில்லை! 

இரண்டாவது சகுனத் தடை.

பஞ்சு அருணாசலத்தின் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் முகத்தைப் பார்த்தார்கள். எந்தச் சலனமும் இன்றி அமைதியாக இருந்தார் பஞ்சு அருணாச்சலம்.

மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.

டேக் நம்பர் ஒன்று 

இரண்டு

மூன்று…

இப்படியாக 12 டேக்குகளுக்கு மேல் வாங்கித்தான் அந்தப் பாடல் ஓகே செய்யப்பட்டது.

நிம்மதியானார் இளையராஜா.  மூடியிருந்த கண்களில் ஈரம் கசிய வெகு நேரம் அம்மனுக்கு நன்றி சொல்லி விட்டு கண் திறந்து பார்த்தார்.

அங்கே ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பஞ்சு அருணாசலம் மட்டும் புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

காலையில் மாங்காடு கோவில் காமாட்சியம்மன் முகத்தில் பார்த்த அதே புன்னகை !

Info. Credits: John Durai Asir Chelliah

Sunday 17 April 2022

சினிமாவுக்கு போன சித்தாளு

"சினிமாவுக்கு போன சித்தாளு" ஒரு நாவல்.

சினிமா மோகத்தால் ஏற்படும் பாதிப்பைப்  பற்றிய கதை ! 

யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் எழுதியிருந்தார் எழுத்தாளர் .

ஆனால் இந்தக் கதையை எம்ஜிஆரை தாக்கித்தான் எழுதி இருக்கிறார் என்று சிலர் எம்ஜிஆரிடம் போய் சொல்ல…

அடுத்து நடந்ததுதான் எவருமே எதிர்பாராதது !

எம்ஜிஆர் வீட்டிலிருந்து எழுத்தாளருக்கு  ஒருநாள் சூடான அழைப்பு வந்ததாம்: 

“தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்.” 

அதே சூட்டில் எழுத்தாளர் சொன்ன பதில்:  “சரி. வரச் சொல்..!” 

அவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் !


Saturday 12 March 2022

நேர்மையா !!! அடிமையா ???

 எழுத்தாளர் சுஜாதா வீடு.

"என்னங்க. நான் ஒண்ணு கேட்டா…அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

தயங்கி தயங்கி தன் கணவரிடம்  இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.

மனைவியை திரும்பிப் பார்க்காமலே 

"என்ன கேக்கப் போறே ?"

"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"

"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."

திருமதி மௌனம்.

"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."

"ஆமா."

"சீக்கிரம் கேளு."

"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்…"

"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."

சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.

"அதுதாங்க, அந்த வீடு விஷயம்…"

"எந்த வீடு ?"

"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."

"ம்…"

"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு…"

"ஆமா."

"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"

"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."

"சரி. இப்போ நாம இருக்கறது..?"

"இது நாம சொந்தமா வாங்கின வீடு."

"எத்தனை பெட்ரூம் ?"

"மூணு பெட்ரூம் வீடு."

"இது வசதியா இல்லையா ?"

"இருக்கு…ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா…"

"ம்…"

"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.

உங்க நண்பர்தானே பணம் கொடுக்க …"

சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.

"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.

புரியுதா ?"

"ம்"

"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை.

ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா

அந்த நிமிஷத்தில இருந்து

நாம அவருக்கு அடிமை."

"ம்."

"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,

அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

"நேர்மையாத்தான்…"

"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"

(திருமதி சுஜாதா அனுபவங்களிலிருந்து)

Credits: John Durai Asir Chelliah

Saturday 5 March 2022

'கிழக்கே போகும் ரயிலில்', சப்பாணியும், மயிலும் பயணித்தனர் - பாரதிராஜா

 'பதினாறு வயதினிலே' படத்தின் இறுதிக் காட்சி.

மயில் ஸ்ரீதேவி கண்ணீருடன் காத்திருக்க,

"நிச்சயம் சப்பாணி வருவான்.

மயிலின் வாழ்வு மலரும்"

என முடித்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

சரி. சிறைக்குப் போன சப்பாணி என்ன ஆனான் ?

திரும்பி வந்தானா ?

காத்திருந்த மயிலு என்ன ஆனாள் ?

இந்தக் கேள்விகளுக்கு, 

அடுத்து வந்த தனது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பதிலை வைத்திருந்தார் பாரதிராஜா.

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ஒரு கல்யாணக் காட்சி.

விஜயன் உட்கார்ந்து மொய் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். 

மைக் செட்டில் ஒரு குரல் சொல்லும் :

"பாப்பாம்பட்டி பழனிச்சாமி  பத்து ரூபா…

அல்லிநகரம் முத்துக்கண்ணு அஞ்சு ரூபா…

பொன்னாண்டி ஒண்ணா ரூபா…

நம்ம ஊரு பஞ்சாயத்துக்காரங்க, 

நூத்தி ஒரு ரூபா…

பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி, அஞ்சு ரூபா…"

சப்பாணி- மயில் .

இருவரையும் காட்சியாகக் காட்டாமல் ,

ஒலி வடிவத்தில் மட்டுமே இதை பதிவு செய்திருப்பார் இயக்குனர்.

ஆம். சப்பாணி ஜெயிலுக்குப் போய் நல்லபடியாகத் திரும்பி வந்து, மயிலோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு பாஸிடிவ் பதிலாய் நமக்குக் கொடுத்து விட்டார் பாரதிராஜா.

உற்றுக் கவனித்தால் நம்முடைய எல்லா  பிரச்சினைகளுக்கும்  கேள்விகளுக்குமான பதிலை, இந்த பிரபஞ்சம் எப்போதுமே தயாராகவே  வைத்திருப்பது தெரியும்.  கவனிப்பது  நம் கையில்தான் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Sunday 13 February 2022

பாலுமகேந்திரா நினைவுகள்

பிப்ரவரி 13.

பாலுமகேந்திரா நினைவு தினம்.

பாலுமகேந்திராவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நேரம் அது. 

அவசரமாக பணம் தேவைப்பட்டது.

யாரிடம் போய் கேட்பது ?

கூச்ச சுபாவம் அதிகமுள்ள பாலுமகேந்திராவுக்கு ஒன்றும் புரியவில்லை.

நீண்ட நேரம் சிந்தித்த பிறகு அவர் நினைவுக்கு வந்த பெயர்… கமல்.

கமலுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இடையில் எப்போதுமே நெருக்கமான ஒரு நட்பு உண்டு.

உடனே கமல் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார்.

உற்சாகமாக பாலுமகேந்திராவை வரவேற்று அமரச் சொன்னார் கமல். 

கூடவே அவரும் அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏனெனில் கமலுக்கும் பாலு மகேந்திராவை மிகவும் பிடிக்கும்.

பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்…

உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்தார் கமல்.

ஏனென்றால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பாலுமகேந்திராவிடம்தான் பேச முடியும்.

பாலு மகேந்திராவும் அதே சுவாரஸ்யத்தோடு பேச…

மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனது.

ஆனால் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தை கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில் கமல் பேச்சை நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தார். "அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்."

இப்படி சொல்லிவிட்டு எழுந்து மாடிக்குப் போய் விட்டாராம் கமல்.

பாலுமகேந்திரா என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார்.

ஷூட்டிங் புறப்படும் இந்த நேரத்தில் கமலிடம் பணம் கேட்பது நாகரீகமாக இருக்காது.

சரி, தானும் புறப்பட வேண்டியதுதான்.

பணத்திற்கு வேறு யாரிடம் போய் நிற்பது என்ற சிந்தனையோடு எழுந்தார் பாலுமகேந்திரா.

இந்த நேரத்தில் கமல் மாடியிலிருந்து விறு விறு என்று வேகமாக இறங்கி பாலுமகேந்திராவின் பக்கத்தில் வந்தார். கமலின் கையில் ஒரு கனத்த கவர் இருந்தது.

"இந்தாங்க" என்று அதை பாலுமகேந்திராவிடம் கொடுத்தார்.

பிரித்துப் பார்த்தார் பாலுமகேந்திரா.

அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகை அந்தக் கவருக்குள் இருந்தது.

என்ன பேசுவது எனத் தெரியாமல் பாலுமகேந்திரா திகைத்து நிற்க, கமல் சொன்னாராம்.

"உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். இது கடன் இல்லை. அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற அடுத்த படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பியுங்க…" 

எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க கமலை கட்டி அணைத்துக்கொண்டார் பாலுமகேந்திரா.

அப்படி கமலுக்கு பாலுமகேந்திரா இயக்கிய படம்தான் சதிலீலாவதி.

இந்து தமிழ் திசையில் படித்த செய்தி இது.

அழகான நட்புகள்…  அவை எப்போதுமே "அழியாத கோலங்கள்."

Info Credits: John Durai Asir Chelliah

Sunday 30 January 2022

அதான் நாகேஷ் !!!

நாகேஷ் நினைவு தினம்  (31-01-2009)

ஒரு முறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே. எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?"என்றாராம்.

அதற்கு சிரித்தபடியே நாகேஷ்,

"உங்க வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா, அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா ? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். 

என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் 'அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனாலதான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது…” 

முகத்தில் ஒரு பரு வந்தாலே,

முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து விடும் இந்த சமூகத்தில்,

தன் முகத்தில் தழும்புகளை  ஏற்படுத்தி விகாரப்படுத்திய இயற்கையை, இறைவனை குறை ஏதும் சொல்லாமல்  அதை நிறைவோடு ஏற்றுக் கொண்டு, இறைவனைப் போற்றியதோடு, எதிர்நீச்சலும்  போட்டு திரை உலகில் வெற்றி பெற்ற  நாகேஷை நினைக்கையில், அவர் நடித்த 'எதிர்நீச்சல்' பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

"வெற்றி வேண்டுமா 

போட்டு பாரடா எதிர் நீச்சல்

சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

எண்ணி துணிந்தால் இங்கு 

என்ன நடக்காதது

கொஞ்சம் முயன்றால் இங்கு 

எது கிடைக்காதது?"

2022 - சந்திரா