Saturday 23 December 2023

பாலச்சந்தர் தக்

“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும், ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”

இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளியிடலாம், எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தலாம் என ஆவலோடும் பரபரப்போடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த பத்திரிகை நிருபர்.

இதற்கு பாலச்சந்தர் சொன்ன பதில்


"நான் இயக்கிய 'நூற்றுக்கு நூறு' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். 

ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.

அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன். 

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

“உடையது விளம்பேல்”

பாலச்சந்தர் நினைவு தினம். (23 டிசம்பர் 2014) 

Friday 24 November 2023

மாவீரனுக்கும் சரி… சாதாரண எலிக்கும் சரி…


உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.  ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். 

பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது, ஆனால் அவரின் மன உளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது…

அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி,  அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும். 

மாவீரனுக்கும் சரி… சாதாரண எலிக்கும் சரி… பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது…

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்!

Sunday 24 September 2023

ஜனனீ ஜனனீ, ஜகம் நீ அகம் நீ - மூகாம்பிகை - இளையராஜா - சுஜாதா

பெங்களூரு வந்து ஒரு பத்து நாட்கள் உட்லேண்டில் தங்கியிருந்த டைரக்டர் பாரதிராஜா, பெங்களூருவாசியான எழுத்தாளர் அமுதவனிடம், சுஜாதா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவிக்க, அவரும் மாலை ஐந்து மணி வாக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு சுஜாதா வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததால் உள்ளே இருப்பார் என்று நினைத்து நான்கைந்து முறை அழைப்பு மணியை அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. அவர் வீட்டில் இல்லை என முடிவுக்கு வந்தார்கள்.

பி.இ.எல்.குவார்ட்டர்ஸில் சுஜாதா வீடு அமைந்திருந்த இடம் மிகவும் ரம்யமானது. அவர் வீட்டுக்கு எதிரே பெரிய மைதானம். அதற்கடுத்து தைல மரத்தோப்பு. தூரத்தில் தெரியும் நந்தி மலை என்று பார்க்கவே மிகவும் பரவசமாக இருக்கும். ("பார்க்க என்னமோ நன்னாத்தான் இருக்கும். ஆனா, அந்த யூகலிப்டஸ் தோப்புக்குள்ள மாசத்துக்கு ரெண்டு கொலையாவது நடந்துண்டே இருக்கும். பகல் நேரங்களில் பார்த்தீங்கன்னா இளஞ் ஜோடிகள் அதுக்குள்ள போறதும் வர்றதுமாக ஒரே கண்றாவி..."--திருமதி சுஜாதா).ஆக,அந்த இடம் இயற்கை ரசிகரான பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

"அவரு இல்லாதது நல்லதாப்போச்சு. கொஞ்சம் அப்படியே இந்த இடத்தில் உட்கார்ந்து இந்த இடத்தை அனுபவிப்போம்.அப்புறம் கிளம்பலாம்" என்று சொல்லி சுஜாதா வீட்டு முற்றத்திலேயே உட்கார்ந்துவிட்டார் பாரதிராஜா.

மறுநாள் காலை சுஜாதாவுக்கு விஷயம் சொன்னபோது மிகவும் வருந்தினார். "அடடா! என்னய்யா இது இப்படி ஆயிருச்சே.ரொம்ப நாளைக்கப்புறம் படம் பார்க்க்கலான்கிறதுக்காக சினிமாவுக்கு போயிருந்தோம்.நேத்து நீங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தீங்கன்னா வீட்லயே இருந்திருப்பேன்" என்றார்.

"சாரி சார். இன்னைக்கு சாயந்திரம் இருப்பீங்கதானே? நாங்க வர்றோம்" என்று அமுதவன் கூற,

"இல்லையில்லை அத்தனை பெரிய டைரக்டர் வீடு தேடி வந்து நான் இல்லாமல் போய், மறுபடி அவரை வீட்டுக்கு வரச் சொல்வது மரியாதையாக இருக்காது. வேணும்னா ஒண்ணு செய்யறேன்.நாளைக்கு சாயந்திரம் அஃபிஷியலா டெல்லி போறேன். அதனால் இவருக்காக நாளைக்கு ஒரு நாள் லீவு போட்டுவிட்டு காலையில உட்லண்ட்ஸ் வந்துர்றேன். அங்க சந்திக்கலாம். அவரைக் கேட்டுச் சொல்லுங்க" என்றார் சுஜாதா.

அதன்படியே காலை எட்டரை மணிக்கே உட்லண்ட்ஸுக்கு வந்து விட்டார் சுஜாதா. 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' கிராமியக் கதைகள், ஆங்கிலப் படங்கள் என்று ஆரம்பித்து புட்டண்ணா,கனகால்,சத்யஜித்ரே , மிருணாள்சென், எம்.எஸ்.சத்யு என்றெல்லாம் நிறையப் பேசினார்கள். கிராமியக் கதை மட்டும்தான் தெரியும் என்ற இமேஜை உடைப்பதற்காகவே சிகப்பு ரோஜாக்கள் என்ற சைக்கலாஜிகல் திரில்லர் எடுக்க இருப்பதாகச் சொன்னார் பாரதிராஜா.

"இருங்க இளையராஜாவைக் கூட்டி வர்றேன். இங்கே வந்ததே சாங் கம்போசிங்குக்காகத்தான். ஆனா வந்ததும் முதல்ல மூகாம்பிகை கோயிலுக்குப் கிளம்பிட்டார். இப்ப காலையில தன் திரும்பி வந்திருக்கார். இனிமேல் தான் அவருடைய ஒர்க் ஆரம்பிக்கணும்" என்று சொல்லி எழுந்து போனவர், பக்கத்து அறையில் தங்கி இருந்த இளையராஜாவை அழைத்து வந்தார். அறிமுகப்படுத்திய பிறகு, பீத்தோவன், மொசார்ட் என பேச்சு ஆரம்பித்தது.

"நான் இப்ப அன்னை மூகாம்பிகையுடன் மட்டும்தான் இருக்கேன். என்னுடைய எண்ணம் சிந்தனை உடம்பு பூராவும் மூகாம்பிகை தான். மொசார்ட்டுக்கு எல்லாம் திரும்பிவர கொஞ்ச நாள் தேவைப்படும். அம்மாவுடைய ஐக்கியத்திலேயே ஒரு பாட்டுப் போட்டு இருக்கேன். இதை நான் போட்டேன்னு சொல்றதைவிட என்னைப் பயன்படுத்தி அவளே, அந்தத் தாயே போட்டுக்கிட்ட பாட்டுன்னுதான் சொல்லணும். இதனை அவ பாதத்துல வச்சி கொண்டு வந்திருக்கேன். அதைச் சரியான சமயத்துலவெளியிடனும். யாருக்கு முதல்ல போட்டுக் காட்டலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்.சுஜாதா சார் வந்திருக்காரு. அவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் வாய்ச்சிருக்கு. சார்! என்னோட ரூமுக்குக் கொஞ்சம் வாங்க. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு அதனுடைய அனுபவம் என்னன்னு சொல்லுங்க... சுஜாதா சார் மட்டும் என்னோட வரட்டும். வேற யாரும் வர வேண்டாம்" என்றார் இளையராஜா.

"நான் மட்டுமாவது வர்றேன்" என்று கிளம்புவதுபோல் பாவனை செய்த பாரதிராஜாவை, "இல்லை உனக்குத் தனியா அப்புறமா போட்டுக் காட்டறேன்" என்று சொல்லி சுஜாதாவை மட்டும் கூட்டிப் போனார். இளையராஜாவின் அறைக்குப் போன சுஜாதா இருபது நிமிடங்கள் கழித்து வந்தார்.

"நிஜமாகவே நல்லாருக்கு. யமன் கல்யாண்ல ரொம்ப அழகா போட்டிருக்கார்.'ஜனனீ ஜனனீ, ஜகம் நீ அகம் நீ' அப்படின்னு ஒரு பாட்டு. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் பாடி இருக்கார். நல்ல மெலடி. அவர் குரலும் கரெக்டா இழைஞ்சிருக்கு. ஆனா, 'இது என்னுடைய குரலே இல்லை. இத்தனை நாள் நான் இந்தக் குரலைக் கேட்டதே இல்லை. இது என் குரல்தானான்னு எனக்கே ஆச்சரியமாயிருக்கு'  அப்படினெல்லாம் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்படறார். ரொம்பவும் பக்தின்னு நினைக்கிறேன்" என்றார் சுஜாதா. 

மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு விமானத்துக்கு நேரம் ஆயிற்றென்று விடைபெற்றார் சென்றார் சுஜாதா.

Sunday 20 August 2023

தெய்வம், தேவதை

ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பால் இஸ்லாமியர் அல்ல. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான், ஆனால் தான் இஸ்லாம் மதத்தை  ஏற்றுக் கொண்ட  பிறகு, தன் மதத்தில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறார் என்பதை எடுத்துச்  சொல்லும் இந்த செய்தி, ஒரு  இனிய விஷயம் !

1967 இல் சேகர் என்பவரின் மகனாக பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் திலீப் குமார்.

இந்த நிலையில், 1989 ம் ஆண்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.  இஸ்லாம் மதத்தின் மிக மிக முக்கியமான கொள்கை ஏக இறைவனுக்கு இணையாக  எவரையும் சொல்லக் கூடாது.

ஆனால் 'நியூ' படத்திற்காக  பாடல் எழுத வந்த வாலி, இதையெல்லாம்  யோசிக்கவில்லை. அவர் பாடலை எழுதும்போது ஏ.ஆர். ரஹ்மானும் அந்த இடத்தில் இல்லை.

வாலி முதலில் எழுதிய வரிகள் :

"காலையில் தினமும்கண்  விழித்தால் நான்
கைதொழும் தெய்வம் அம்மா !"

பாடலை எழுதிக் கொடுத்து விட்டு  வாலி போய் விட்டார்.
ஒலிப்பதிவுக்காக வந்த  ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை படித்துப் பார்த்தார் .

அப்புறம் நடந்ததை வாலியே  சொல்கிறார் இப்படி :

"‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாட்டு எழுதி விட்டு வர ரஹ்மானிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.

“வாலி சார்..”

“என்னய்யா..?”

“வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா வேற ஏதாவது சொல்லுங்க சார்!” 

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி சரி, தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ! என்று மாற்றிக் கொடுத்தேன்.”

வாலி வார்த்தைகளை மாற்றித் தர, தெய்வம் தேவதையாக மாறிப்போனது.
அந்த அழகிய பாடலும் உருவானது.

“காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, 
என் தாய் போல் ஆகிடுமா?”

Tuesday 23 May 2023

இப்படிக்கு புத்தனின் மனைவி

புத்தனாவது சுலபம், 

ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது…???


புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்….

மனைவி கேட்கிறாள்: 

"என்னை விட்டுப் போனது பரவாயில்லை" ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே!

நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன்.

ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது.

ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்….???

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல! தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.

அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: 

"நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே 

தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா…???"

புத்தர் சொல்கிறார்: "தாராளமாக….."

அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால், 

இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை.  உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும்.  இடம் பொருட்டே அல்ல….

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா… ஓடுகாலி என்றிருக்கும்.

சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது… அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை.

ஒற்றைக் குழந்தை ராகுலன்.

விடுமா ஆண்வர்க்கம்….???

சாதாரணமாய் இருந்தாலே விடாது.

உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்…..???

புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள்.

தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள்.

ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.

எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம்…..???

சொல்லுங்கள் யார் துறவி இப்போது…???

2023 - சந்திரா