Saturday 12 March 2022

நேர்மையா !!! அடிமையா ???

 எழுத்தாளர் சுஜாதா வீடு.

"என்னங்க. நான் ஒண்ணு கேட்டா…அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

தயங்கி தயங்கி தன் கணவரிடம்  இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.

மனைவியை திரும்பிப் பார்க்காமலே 

"என்ன கேக்கப் போறே ?"

"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"

"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."

திருமதி மௌனம்.

"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."

"ஆமா."

"சீக்கிரம் கேளு."

"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்…"

"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."

சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.

"அதுதாங்க, அந்த வீடு விஷயம்…"

"எந்த வீடு ?"

"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."

"ம்…"

"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு…"

"ஆமா."

"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"

"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."

"சரி. இப்போ நாம இருக்கறது..?"

"இது நாம சொந்தமா வாங்கின வீடு."

"எத்தனை பெட்ரூம் ?"

"மூணு பெட்ரூம் வீடு."

"இது வசதியா இல்லையா ?"

"இருக்கு…ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா…"

"ம்…"

"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.

உங்க நண்பர்தானே பணம் கொடுக்க …"

சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.

"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.

புரியுதா ?"

"ம்"

"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை.

ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா

அந்த நிமிஷத்தில இருந்து

நாம அவருக்கு அடிமை."

"ம்."

"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,

அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

"நேர்மையாத்தான்…"

"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"

(திருமதி சுஜாதா அனுபவங்களிலிருந்து)

Credits: John Durai Asir Chelliah

Saturday 5 March 2022

'கிழக்கே போகும் ரயிலில்', சப்பாணியும், மயிலும் பயணித்தனர் - பாரதிராஜா

 'பதினாறு வயதினிலே' படத்தின் இறுதிக் காட்சி.

மயில் ஸ்ரீதேவி கண்ணீருடன் காத்திருக்க,

"நிச்சயம் சப்பாணி வருவான்.

மயிலின் வாழ்வு மலரும்"

என முடித்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

சரி. சிறைக்குப் போன சப்பாணி என்ன ஆனான் ?

திரும்பி வந்தானா ?

காத்திருந்த மயிலு என்ன ஆனாள் ?

இந்தக் கேள்விகளுக்கு, 

அடுத்து வந்த தனது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பதிலை வைத்திருந்தார் பாரதிராஜா.

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ஒரு கல்யாணக் காட்சி.

விஜயன் உட்கார்ந்து மொய் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். 

மைக் செட்டில் ஒரு குரல் சொல்லும் :

"பாப்பாம்பட்டி பழனிச்சாமி  பத்து ரூபா…

அல்லிநகரம் முத்துக்கண்ணு அஞ்சு ரூபா…

பொன்னாண்டி ஒண்ணா ரூபா…

நம்ம ஊரு பஞ்சாயத்துக்காரங்க, 

நூத்தி ஒரு ரூபா…

பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி, அஞ்சு ரூபா…"

சப்பாணி- மயில் .

இருவரையும் காட்சியாகக் காட்டாமல் ,

ஒலி வடிவத்தில் மட்டுமே இதை பதிவு செய்திருப்பார் இயக்குனர்.

ஆம். சப்பாணி ஜெயிலுக்குப் போய் நல்லபடியாகத் திரும்பி வந்து, மயிலோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு பாஸிடிவ் பதிலாய் நமக்குக் கொடுத்து விட்டார் பாரதிராஜா.

உற்றுக் கவனித்தால் நம்முடைய எல்லா  பிரச்சினைகளுக்கும்  கேள்விகளுக்குமான பதிலை, இந்த பிரபஞ்சம் எப்போதுமே தயாராகவே  வைத்திருப்பது தெரியும்.  கவனிப்பது  நம் கையில்தான் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

March 2022 - சந்திரா