Sunday 30 January 2022

அதான் நாகேஷ் !!!

நாகேஷ் நினைவு தினம்  (31-01-2009)

ஒரு முறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே. எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?"என்றாராம்.

அதற்கு சிரித்தபடியே நாகேஷ்,

"உங்க வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா, அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா ? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். 

என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் 'அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனாலதான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது…” 

முகத்தில் ஒரு பரு வந்தாலே,

முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து விடும் இந்த சமூகத்தில்,

தன் முகத்தில் தழும்புகளை  ஏற்படுத்தி விகாரப்படுத்திய இயற்கையை, இறைவனை குறை ஏதும் சொல்லாமல்  அதை நிறைவோடு ஏற்றுக் கொண்டு, இறைவனைப் போற்றியதோடு, எதிர்நீச்சலும்  போட்டு திரை உலகில் வெற்றி பெற்ற  நாகேஷை நினைக்கையில், அவர் நடித்த 'எதிர்நீச்சல்' பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

"வெற்றி வேண்டுமா 

போட்டு பாரடா எதிர் நீச்சல்

சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

எண்ணி துணிந்தால் இங்கு 

என்ன நடக்காதது

கொஞ்சம் முயன்றால் இங்கு 

எது கிடைக்காதது?"

No comments:

அதான் நாகேஷ் !!! - சந்திரா