Saturday 5 March 2022

'கிழக்கே போகும் ரயிலில்', சப்பாணியும், மயிலும் பயணித்தனர் - பாரதிராஜா

 'பதினாறு வயதினிலே' படத்தின் இறுதிக் காட்சி.

மயில் ஸ்ரீதேவி கண்ணீருடன் காத்திருக்க,

"நிச்சயம் சப்பாணி வருவான்.

மயிலின் வாழ்வு மலரும்"

என முடித்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

சரி. சிறைக்குப் போன சப்பாணி என்ன ஆனான் ?

திரும்பி வந்தானா ?

காத்திருந்த மயிலு என்ன ஆனாள் ?

இந்தக் கேள்விகளுக்கு, 

அடுத்து வந்த தனது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பதிலை வைத்திருந்தார் பாரதிராஜா.

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ஒரு கல்யாணக் காட்சி.

விஜயன் உட்கார்ந்து மொய் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். 

மைக் செட்டில் ஒரு குரல் சொல்லும் :

"பாப்பாம்பட்டி பழனிச்சாமி  பத்து ரூபா…

அல்லிநகரம் முத்துக்கண்ணு அஞ்சு ரூபா…

பொன்னாண்டி ஒண்ணா ரூபா…

நம்ம ஊரு பஞ்சாயத்துக்காரங்க, 

நூத்தி ஒரு ரூபா…

பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி, அஞ்சு ரூபா…"

சப்பாணி- மயில் .

இருவரையும் காட்சியாகக் காட்டாமல் ,

ஒலி வடிவத்தில் மட்டுமே இதை பதிவு செய்திருப்பார் இயக்குனர்.

ஆம். சப்பாணி ஜெயிலுக்குப் போய் நல்லபடியாகத் திரும்பி வந்து, மயிலோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு பாஸிடிவ் பதிலாய் நமக்குக் கொடுத்து விட்டார் பாரதிராஜா.

உற்றுக் கவனித்தால் நம்முடைய எல்லா  பிரச்சினைகளுக்கும்  கேள்விகளுக்குமான பதிலை, இந்த பிரபஞ்சம் எப்போதுமே தயாராகவே  வைத்திருப்பது தெரியும்.  கவனிப்பது  நம் கையில்தான் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

No comments:

'கிழக்கே போகும் ரயிலில்', சப்பாணியும், மயிலும் பயணித்தனர் - பாரதிராஜா - சந்திரா