Saturday, 1 March 2025

ஒரு எச்சரிக்கை தினம்

கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையாகி வெளிவந்த தியாகராஜ பாகவதரின் சினிமா உலக வாழ்க்கை சின்னாபின்னமாகிப் போயிருந்த நேரம் அது.

அந்தச் சிக்கலான நேரத்தில்

சிவாஜியின் ஊதியத்தை விட 10,000 ரூபாய் அதிகம் தருவதாகச் சொல்லி, 

சிவாஜி கதாநாயகனாக நடித்த 'அம்பிகாபதி' படத்தில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். 

ஆனால் 'கதாநாயகனாக நடித்து வந்த நான் அப்பாவாக நடிப்பதா ?'

முடியாது எனக் கூறி, வலிய வந்த அந்த வாய்ப்பை மறுத்து விட்டார் பாகவதர்.

கொஞ்சம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும், நிதானமாக சிந்தித்து ஒத்துக் கொண்டிருந்தால், இன்னும் கூட ஒரு ரவுண்ட் சினிமாவில் வந்திருக்கலாம். ஆனால் ஏனோ அதை மறுத்து விட்டார் பாகவதர் !

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் மிகப் பெரிய தொகையைத் திரட்டித் தந்த பாகவதருக்கு நன்றி கூறி, நூறு ஏக்கர் நிலத்தையும், திவான் பகதூர் பட்டத்தையும் அன்றைய அரசு கொடுத்தது.

அதை எச்சரிக்கை உணர்வுடன் ஏற்றுக் கொண்டிருந்தால், நிழல் உலகமான திரை உலகம், தன்னைக் கை விட்ட கடைசி காலத்தில், அந்த நில புலன்களாவது அவரைக் காப்பாற்றி இருக்கும். அதையும் பாகவதர் மறுத்து விட்டார் !

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை.” – இது எம்.கே.தியாகராஜ பாகவதர் சொன்ன அனுபவ மொழி.

ஆம். பட்டுக் கட்டிலில் படுத்துறங்கி, தங்கத் தட்டில் உணவருந்திய  பாகவதரையே வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போட்டது என்றால்,

நாம் எல்லாம் அதற்கு முன் எம்மாத்திரம் ?

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். எப்போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.

இதுதான் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

இன்று எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்.

இது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை தினம்.

No comments:

ஒரு எச்சரிக்கை தினம் - சந்திரா