Saturday, 15 February 2025

தமிழ் - ஜி யு போப் - திருவாசகம்

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க"

 - திருவாசகம்

ஒரு வெளிநாட்டு மனிதரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது. 

அவர் பெயர் ஜி யு போப்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக, இங்கிலாந்திலிருந்து 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்த அறிஞர். 

ஆனால் தமிழ் நாட்டில் மதத்தைப் பரப்புவது என்றால் அது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.

முதலில் தமிழை நன்கு படிக்க வேண்டும். பிழை இல்லாமல் பேச வேண்டும். தமிழர்களோடு ஒன்று கலக்க வேண்டும்.

அதற்காக வேறு வழியின்றி தமிழைப் படிக்க ஆரம்பித்தார் ஜி யு போப். ஆனால் படிக்கப் படிக்க,  அவருக்குள் ஏதோ ஒரு அதிசய மாற்றம் நிகழ ஆரம்பித்தது. தன்னை அறியாமலேயே தமிழ் அவருக்குப் பிடித்துப் போயிற்று. மதத்தைப் பரப்ப வந்த நோக்கம் மறந்தே போய் விட்டது.

இன்னும் இன்னும் படிக்க வேண்டும் என்று இனிய தேடல் ஏற்பட்டது. தணியாத தாகத்தோடு தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் …

படிக்கப் படிக்க பரவசமாகிப் போனார் ஜி யு போப். தமிழின் இனிமைக்கு அடிமையும் ஆனார். மதம் மாற்ற இங்கு வந்த தன்னை, மனம் மாற்றிய தமிழை, தன் உயிரினும் மேலாக நேசித்தார்.

இப்போது அவருக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது. இந்தத் தமிழ் நூல்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதை உலகறியச் செய்தால் என்ன ? 

"யான் பெற்ற இன்பம் 

பெறுக இவ்வையகம்"

முழு மூச்சோடு மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தார் 

ஜி. யு. போப்.

40 ஆண்டு காலம் தமிழே தன் பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்த ஜி.யு.போப், முதுமையில் உடல் தளர்ந்ததால் 1882 ல் இங்கிலாந்து திரும்பி விட்டார்.

ஆனாலும் திரும்பத் திரும்ப அவரது மனம் திருவாசகத்தையே இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது.

ஜி யு போப் தனது முதுமைக் காலத்தில், தனது நெருங்கிய நண்பர்களிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்தாராம் :

“தான் இறந்த பின் தனது கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது 

தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் !”

இவைதான் அவரது விருப்பம். 

'திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்'

என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

(ஆனால் அவரது கல்லறையில் அவர் விரும்பிய விஷயங்கள் சேர்க்கப்படவில்லை எனச்  சொல்கிறார்கள்)

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில், சலவைக் கல்லால் ஆன ஜி யு போப் கல்லறை இருக்கிறது.

அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் :

'மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.'





No comments:

தமிழ் - ஜி யு போப் - திருவாசகம் - சந்திரா